ஓவியன்
வான்கோ தன் காதலிக்கு காதை அறுத்து கொடுக்கவில்லையாம், நிர்கதியான நிலையை அறிந்திருந்தும் கடனைத் திருப்பிக் கேட்ட விலைமாதுக்கு தான் அறுத்துக் கொடுத்தாராம். அவர் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லையாம், யாரோ ஒரு சிறுவனை காப்பாற்றத்தான் அப்படிப் பொய் சொன்னாறாம். அவர் சித்தம் கலங்கியவர் கிடையாதாம், மனிதர்களை கண்டுப்பயந்து தான் ஒதுங்கி நின்றாராம். நேற்றுக் கனவில் வந்தவர், இப்படி நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். “ஓவியம் உலகை அடக்கும் உலகம் ஓவியத்தை அடக்கும் ஓவியன் தன்னை அடக்கி உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்." என்ற ஆத்மாநாம் கவிதையை படித்துக் காட்டினேன். சிறு புன்னகை செய்தார். பின்பு சுவற்றில் ஒடுக்கியிருந்த நீலவானில் மாயமானார். 08-03-2021