கானல் நீர் / 2019
இந்த நிலம் யாருக்கு சொந்தம் ?
உலக சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை. சிறிய முதலீட்டில் நம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரும்
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை நான் மனதில் பதித்து கொண்டுள்ளேன். ஒரு சிறுபதிவை சரி எழுதி அதை பற்றிய அதிர்வை எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் சமீபத்தில்
நான் பார்த்த படம் "கானல் நீர்" , மலையாள மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யபட்ட படைப்பு. மிக இயல்பான சாதாரண கதைதான்
ஓர் படம் தொடங்கியது முதல் முடிவு
மட்டும் உங்களை சோர்வடையவோ, சலிப்படையவோ செய்யாமல்
இருக்கையில் அமர்த்தி வைத்திருந்தாலே பேரும் வெற்றிதான். அந்த கலை அத்தனை இலகுவாக எல்லோருக்கும் வசப்பட்டுவிடாது. உங்கள் பொறுமையை சோதித்த படுமோசமான ஓர் படத்தை
பார்த்த தருணத்தை மனதில் மீட்டு பாருங்கள் நான் சொல்வது புரியும்.
விளிம்புநிலை மனிதர்களை பற்றிய கதை. நிலம் இல்லாத எளியவர்களின் போராட்டம்தான் இந்த படம். சொந்தவீடு என்பது ஒவ்வொரு மனிதனினதும்
வாழ்நாள் கனவு. அதை கடந்து வாழமுடிந்துவிட்டால் அவர்கள் ஞானிதான்.
எந்த வித அடிப்படை வாழ்வாதாரம் இன்றி திருமண வாழ்க்கையில் நுழைந்து சிக்குண்டு உழல்பவர்களை பார்க்கும் போதும் என் இளம் பிராயத்தில் யோசிப்பேன். ஏன் இவர்களால் திட்டமிட்டு வாழ முடியவில்லை? சிறுக சிறுக சேமித்து வாழ்கை தரத்தை உயர்த்தி கொள்ள முடியாதா? இளையவன், எனக்கு தோன்றும் இந்த யோசனைகூட அவர்களுக்கு ஏன் தோன்றவில்லையேன, முடிவில் அவர்கள் மீதுதான் குறைப்பட்டு கொள்வேன். அதற்கான பதில் பிறகுதான் எனக்கு தெளிவாக கிடைத்தது.
இந்த உலகம் ஒவ்வொரு தனிமனிதனின் பாதையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களையும், அனுபவத்தையும் கொடுக்கிறது. அந்த எல்லையை ஒட்டிவளரும் அறிவை தாண்டி அவனால் யோசிக்க முடிவதில்லை. அதற்கு மேல் முடியாது. அவர்கள் தங்கள் முழு வலிமையையும் திரட்டி தான் போராடி கொண்டிருக்கிறார்கள். என்னால் சுலபமாக செய்ய முடிந்த ஒன்று அவர்களுக்கு வாழ்நாளில் நெருங்க கூட முடியாத ஒரு இலக்காகும்.
"கானல் நீர்" வாழ்நாளில் தனக்கென சொந்தமான நிலத்தில் ஒரு குடிசை அமைத்து. நிம்மதியாக படுத்துறங்க வேண்டும் என்பதை ஒரே நோக்காக கொண்டு போராடும் ஒரு அபலையின்
கதை. அதற்கு அவள் படும் அவஸ்த்தை கொஞ்சம் நச்சமல்ல! வாழ்கையையே விலையாக கொடுக்க வேண்டியிருக்கிறது.
இந்த சினிமா நமக்கு திகட்டிய அதே பழைய சோககதை தான், உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் என்னை கலங்கடித்து விட்டது. அடிப்படை சினிமாதனங்கள் கூட இல்லை. அதேநேரம் மிக இயல்பாக நகரும் கதையின் போக்கில் கட்டுண்டு விட்டேன்.
வானுயர கட்டிடங்களை கட்டி கொண்டிருக்கும் இந்த இருபத்தோராம்
நூற்றாண்டிலும் வீடில்லாமல் தெருக்களிலும், பாலங்களின் கீழும்
மக்கள் வசித்து கொண்டிருப்பது கொடுமையான விஷயம்.
பேரு நகரத்தின் தெருக்களில் குழந்தையுடன் படுத்துறங்கும்
தெரு வாசிகளை நித்தமும் நீங்கள்
வாழ்வில் கடந்து போய்க்கொண்டிருப்பீர்கள். நம் வாழ்கை போராட்டத்தில் அவர்களை பற்றி கவலைபட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்போம். இந்த படம்
நம்மை ஒரு நிமிடம் உலுக்கிவிடும்.
இதையெல்லாம் பார்க்கும் போது
பேசாமல் மனிதன் நாடோடி வாழ்கை
வாழ்ந்த வேடுவ யுகத்திலேயே இருந்திருக்கலாமொ என்று தோன்றுகிறது. வேளாண்மை சமூகமாக ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கிய பின்பே இந்த நிலம்,
வீடு, குலம், கோத்திரம் என எல்லா தலைவலியும் ஆரம்பித்தது.
பிரதான கதாபாத்திரமான பிரியங்கா நாயரின் நடிப்பு செம்மை. சீத்தாவாக
மனதில் பதிந்து விட்டார். நல்ல படம் தவறவிட்டு விடாதீர்கள்.
நரேஷ் - 42
Comments
Post a Comment