பெண்குயின் (2020)
Spoiler Alert
படத்தை உருவாக்க நிறையவே கஷ்டப்பட்டுள்ளார்கள்.
நாங்களும் கஷ்டப்பட்டே பார்க்க வேண்டியுள்ளது. திரில்லர், சஸ்பென்ஸ் படத்திற்கு
உண்டான திரிலை கடைசிமட்டும்
உணரவே முடியவில்லை.
நிறைமாத கர்ப்பிணியான
கீர்த்திசுரேஷ் வயிற்றை தூக்கி
கொண்டு அலைவதை பார்க்கும்
போதுதான் நமக்கும் கஷ்டமாக உள்ளது.
படத்தில் உள்ள பெரிய ஓட்டை
நம்பக தன்மையில்லாத காட்சி அமைப்புதான். நடுச்சாமம் வரைக்கும் எங்கோ
காட்டுக்குள் உள்ள ஒரு ஏரிக்கரையில் நிறைமாத கர்ப்பிணியான கீர்த்தி
உற்காந்து கொண்டிருப்பது
எல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எங்கோ கொரியாவில் அல்லது ஹாலிவுட் சினிமாவில் இப்படி
ஒரு காட்சி வந்தால் நம்பலாம். காரணம் நமக்கு அவர்களின்
வாழ்வு முறை, மண்ணின்
கலாசாரம் பற்றியெல்லாம்
ஒன்றும் பெரிதாக
தெரியாதபடியால் சமரசம்
செய்து கொள்ளலாம். நம் ஊரில் இப்படி ஒரு நிகழ்வை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
அதேபோல இன்னொரு
முக்கியமான இடத்தையும் குறிப்பிட வேண்டும். அந்த சைக்கோ கொலைகாரனின் வீட்டுக்குள் சென்று கீர்த்தி செய்யும்
துப்பறியும் சாகசம் எல்லாம்
மகாஅபத்தம்! அவன் சைக்கோ
என்று உறுதியான பின்னரும். அங்கிருந்து நகராமல், அவனிடம் நாயை உச்சா போக கூட்டிக்கொண்டு போக சொல்லிவிட்டு ரத்தமும், சதையும், பிணமும் இருக்கும் அறையில் நுழைந்து சாவகாசமாக
நேரத்தை போக்கி பின்னர் அவனிடமே மாட்டிக்கொள்வது.
அடுத்து இன்னொரு
மிக முக்கியமான விஷயம்.
இந்த படத்தை பற்றி எழுத தூண்டியதே இந்த காட்சிதான்.
நான் பார்த்த பெரும்பாலான
தமிழ் சினிமாக்களில் பார்க்கும் முட்டாள்தனமான காட்சி;
லேப்ரோடர்(Labrador) அல்லது
கோல்டன் ரேட்ரிவர் (Golden Retriever)
இன நாய்களை கடி நாய்களாக காட்டுவது. இயக்குனர் A.L. விஜய்,
G.V. பிரகாஷ்சை வைத்து இயக்கிய வாட்ச்மேன் படத்திலும்
கோல்டன் ரேட்ரிவர் இன நாயை
காவல் நாயாக காட்டி இருப்பார். பெண்குயின் படத்திலும் சைக்கோ டாக்டரிடம் வசமாக மாட்டிக்கொண்ட
கீர்த்தி தன் லெப் ரோடர் இன நாயை
அவன் மேல ஏவி விட்டு தப்பித்து விடுவார். படத்தில் இது மிகமுக்கியமான இடம்.
லேப்ரோடர், கோல்டன் ரேட்ரிவர்
இன நாய்கள் உருவத்தில் பெரிதாக இருந்தாலும் மிகவும் சாதுவானவை.
உங்கள் கையை அதன் வாய்க்குள்ளே விட்டால் கூட கடிக்காது. அது குலைக்கும் போது அதன் முகத்தை பாருங்கள் அதில் எந்த வன்மமும் தெரியாது.
வீட்டுக்குள் திருடன் நுழைந்து விட்டால்கூட வீட்டு அறை வரைக்கும் கூட்டி சென்று திருட முழு ஒத்துழைப்பையும் வழங்கி பின்னர் அவன் கூப்பிட்டால் அவனுடனேயே சேர்ந்து போய்விடும். அந்த அளவுக்கு மனிதர்களிடம் நட்பு பாராட்டக் கூடியவை. அவற்றை வைத்து
இவ்வாறான காட்சிகள் அமைக்கவே
கூடாது.
இனிமேல் தயவு செய்து காவல் நாயை பயன்படுத்தவேண்டி இடத்தில் இவற்றை பயன்படுத்தி காட்சியின் வீரியத்தை குறைத்து விடாதீர்கள். படத்தின் ஒரு பிரேமில் பறக்கும் ஒரு கொசு கூட காரணமின்றி பார்க்ககூடாது. சுவற்றில் மாட்டியிருக்கும் ஒரு புகைப்படம் தொடங்கி, தரையில் கிடக்கும் குப்பை வரைக்கும் கதையில் அதன் தேவை இருக்கும் போது முக்கியமான காட்சியில்
வரும் நாய்க்கு கூட சிறு உழைப்பை கொடுக்கவேண்டும்.
உயர் இன நாய்களை வளர்த்த அனுபவத்தில் எனக்கு இந்த காட்சிகள் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. இதை பற்றிய புரிதல் இல்லாத சாதாரண ஒருவருக்கும், சாதுவான நாய்க்கும் காவல் நாய்க்கும் உண்டான வித்தியாசம் அதன் உடல் மொழியிலேயே தெரிந்து விடும்.
இந்த பதிவை படிக்கும் இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் இதை
கவனத்தில் கொள்ளுங்கள்.
படம் பார்க்கும் ரசிகனை குறைத்து எடைபோட்டு கண்டுகொள்ளாமல்
போனால் கடைசியில் உங்களுக்குதான் நஷ்டம்.
நல்ல ரசனை உள்ள சினிமா ரசிகனை இந்த படம் திருப்தி படுத்தாது. ஆனால் மாஸ் ஹீரோக்களை வைத்து
பழைய மசாலாவை அரைக்காமல்.
பாட்டு, தேவையற்ற காட்சிகள் இல்லாமல். இரண்டு மணிநேரம்
ஓர் திரில்லரை தர முயன்று கொஞ்சம் இயக்குனர் வெற்றியும் கண்டுள்ளார். அந்த வகையில் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
இசையும், ஒளிப்பதிவும், கீர்த்தியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள்.
கதை வசனத்தில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். இது என் பார்வை.
நீங்களும் படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
Comments
Post a Comment